திருப்புவனம்: கொரோனா 144 தடை உத்தரவால் கீழடி, கொந்தகையில் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த பிப். 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இதேபோல் கொந்தகை, அகரம் பகுதிகளிலும் அகழாய்வுகள் தொடங்கின. மூன்று இடங்களிலும் 55 பணியாளர்கள், ஐந்து தொல்லியல் அலுவலர்கள் அகழாய்வில் ஈடுபட்டு வந்தனர். செப்டம்பர் மாதம் வரை பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக கீழடி, கொந்தகையிலும் அகழாய்வு பணிகள் நிறுத்தப்படுவதாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதனால் அகழாய்வு தளம் அனைத்தும் மூடப்பட்டது. அகரத்தில் குழிகள் அனைத்தும் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளன. பணிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படவில்லை. கொரோனா பிரச்னை தீர்ந்த பிறகே பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.