டெல்லி: உள்நாட்டு விமானங்கள் இயங்குவதற்கான தடையை ஏப்ரல்14-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் படிப்படியாக பரவி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. 5,31,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் நோயை உயிர்கொல்லி தோற்று நோய் என அறிவித்துள்ளது.
அதே போன்று மத்திய அரசும் கொரோனா வைரஸை பேரிடர் தடுப்பு நோயாக அறிவித்துள்ளது. மேலும் இந்த நோய் பரவுவதை தடுக்க ரயில்கள், பேருந்துகள் மற்றும் அனைத்து பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் நாடுகளின் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் வைரஸைக் கட்டுப்படுத்த வெளிநாட்டினருக்கு பயணத் தடை விதித்ததன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று விமானத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு விமானங்கள் இயங்குவதற்கு வரும் 31-ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த தடை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.