சென்னை: காவல்துறை பணிகளை வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் விமர்சித்து தகவல் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார்கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை விதிகளை மீறினால் அவர்களை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் எனவும் கூறினார். எனவே போலீசின் செயல்பாடுகளை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால் கடைகள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்து அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. முக்கிய சாலை சந்திப்பில் தடுப்பு அமைத்து வாகன போக்குவரத்தை தடுத்து வருகின்றனர். தேவையில்லாமல் சாலையில் செல்பவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர். இதனிடையே ஊரடங்களை மீறி வாகனங்களில் வருபவர்களை காவல்துறையினர் தாக்குவதாக புகார் எழுந்தது.
இதனை கண்டிக்கும் வகையில் வாகன ஓட்டிகளை தாக்கும் போலீசார் வேலையிழக்க நேரிடும் என்று வழக்கறிஞர் ஒருவர் எச்சரிக்கும் ஆடியோ நேற்று இணையதளத்தில் வேகமாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.