சென்னை: மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்துக்கு மட்டுமே பெரும் பகுதி உள் ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று ராமதாஸ் எடுத்துள்ள தேர்தல் கால அரசியல் நிலைபாடு காரணமாக, தமிழகத்தில் உள்ள மற்ற சமூகத்தை சேர்ந்த அனைவரும் அதிருப்தியில் பாமகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தமிழக அரசுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. வன்னியர் சமுகத்தினர் 1987ம் ஆண்டுகளில் தமிழக அரசின் இடஒதுக்கீடு பட்டியலில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்தனர். இதனால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் இடஒதுக்கீடு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி, 108 பின்தங்கிய சமூகங்களை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவை ஏற்படுத்தி, கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தார்.தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சீர் மரபினர் உட்பட 115 சமூகங்கள் உள்ளன. ஆனால் எங்கள் போராட்டத்தால் தான் இந்த இடஒதுக்கீடு கிடைத்தது என்பதால் தற்போதுள்ள 20 சதவீத இடஒதுக்கீடு வன்னியர் சமூகத்துக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் கூறி பாமக தலைவர் ராமதாஸ் சமீபத்தில் திடீரென போராட்டத்தை அறிவித்தார். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கோரிக்கையை முன் வைத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்திருப்பது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, தொடர்ந்து 40 ஆண்டுகளாக தனி இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை பாமக முன்வைத்தாலும், மாநிலத்திலும் மத்தியிலும் கூட்டணியில் இருந்தனர்.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சீர் மரபினர் உட்பட 115 சமூகங்கள் உள்ளன. இந்த சமூகத்தினருக்கும் சேர்த்து தான் இந்த 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டையே வன்னியர் சமூகத்துக்கு முழுமையாக தனி ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்பதுதான் ராமதாஸ் கோரிக்கையாக உள்ளது. கூட்டணியில் இவ்வளவு நாளாக இருக்கும் பாமக இதுவரை சும்மா இருந்து விட்டு தற்போது இந்த கோரிக்கைக்காக குரல் கொடுப்பது என்பது அதிமுகவை மிரட்டும் செயலாக இருக்கிறது என்று அதிமுகவினரும் ராமதாசை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.இதனால் சற்று இறங்கி வந்த அவர், 20 சதவீத தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை சற்று தளர்த்தி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகத்தினருக்கு ஒரு பகுதியையும், பெரும் பகுதியை வன்னியர் சமூகத்துக்கும் உள் ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் பட்சத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மற்ற முக்குலத்தோர் உள்ளிட்ட சமூகத்தினர் தங்களுக்கும் அதேபோன்று இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கு மட்டும் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று அரசியல் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ், 200க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கும் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கேட்பது ஏன் என்றும், சமூக நீதியின் அடிப்படையில் இது சரியானது தானா என்றும் கேள்வி எழுப்பி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெரும் பகுதியை வன்னியர் சமூகத்துக்குஉள் ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்….
The post வன்னியருக்கு 20% உள்ஒதுக்கீடு கேட்டு ராமதாஸ் பிடிவாதம் மற்ற சமூகத்தை சேர்ந்த அனைவரும் போர்க்கொடி: தமிழக அரசு அதிர்ச்சி appeared first on Dinakaran.