×

4 நாட்களாக உணவின்றி ஊர் திரும்ப முடியாமல் கேரளாவில் தவிக்கும் குடந்தை தொழிலாளர்கள்: மீட்பதாக தாசில்தார் தகவல்

கும்பகோணம்: கேரளாவில் 4 நாட்களாக உணவின்றியும், ஊர் திரும்ப முடியாமலும் குடந்தையை சேர்ந்த 14 கூலித்தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவள்ளியங்குடியை சேர்ந்த குமார், பாரதி, பாலக்குடியை சேர்ந்த வினோத், பிரபாகரன், கார்த்தி, மதியழகன், அறிவழகன், பார்த்திபன், செல்லப்பன், அண்ணாசாமி, க.பாரதி, மேலமராயத்தை சேர்ந்த நவீன், கீழ்வேளூரை சேர்ந்த முரளி, புழுதிக்குடியை சேர்ந்த திருநாவுக்கரசு ஆகிய 14 பேரும் கடந்த 20 நாட்களுக்கு முன் கேரள மாநிலம் கோழிக்கோடு தாலுகா வடகரை மற்றும் கண்ணூர் பகுதிகளில் உள்ள பழைய வீடுகளை இடிக்கும் வேலைக்கு சென்றனர்.

இதில் குமார் வடகரையிலும், மற்ற 13 பேரும் கண்ணூரிலும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,பேருந்து, ரயில்கள் இயங்காததால் 14 பேரும் கும்பகோணம் பகுதிக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து கும்பகோணத்தில் உள்ள நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டவர்கள், 4 நாட்களாக உணவின்றி தவிக்கிறோம். உடனடியாக 14 பேரையும் ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக திருவிடைமருதூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தாசில்தார் சிவகுமார் கூறுகையில், கேரளாவில் உள்ள கும்பகோணத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு வழங்கவும், அவர்களை பாதுகாப்பாக அழைத்து வரவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Kasunda ,home ,Kerala ,Dasaltar , Kerala, kundan workers, Dasillard
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...