×

சத்தியமங்கலம் பகுதியில் பூக்கள் பறிக்காததால் மாடுகளுக்கு உணவாகும் மல்லிகை செடிகள்: தினமும் 20 டன் பூக்கள் வீண்

சத்தியமங்கலம்: கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  மல்லிகை பூக்கள் பறிக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் மாடுகளை விட்டு செடிகளை மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  சுற்று வட்டார பகுதிகளான பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம், இக்கரைதத்தப்பள்ளி, பகுத்தம்பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர்,  சிக்கரசம்பாளையம், ராமபைலூர், புதுவடவள்ளி, கஸ்தூரிநகர், புதுக்குய்யனூர்,  ராஜன்நகர், பட்டரமங்கலம், புதுபீர்கடவு, காராச்சிக்கொரை, கோடேபாளையம், ஆலாம்பாளையம், எரங்காட்டுர், செண்பகபுதூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு  நகரங்களுக்கும், மைசூரு, பெங்களுரு, ஐதராபாத், கொச்சின், எர்ணாகுளம்  உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டுள்ளதால்  சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் மல்லி செடிகளில் இருந்து பூக்கள் பறிக்கும் பணி நடைபெறவில்லை.

இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஒரு சில  விவசாயிகள் மலர்கள் பறிக்கப்படாததால் செடிகளை கவாத்து செய்வதற்காக மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். இதுகுறித்து சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்  கூறியதாவது: சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் விளையும் மல்லிகைப்பூக்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக இங்கு மல்லிகைப்பூ அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூ உற்பத்தி நாளொன்றுக்கு 20 டன்னாக அதிகரித்துள்ளது. மல்லிகை குறைந்த பட்சம் ஒரு கிலோ ரூ.250க்கு விற்றாலும் 20 டன் என கணக்கிட்டால் சுமார் ரூ.50 லட்சம் இழப்பு  ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மல்லிகைப்பூ மட்டுமின்றி  முல்லை, காக்கடா, செண்டு, கோழிக்கொண்டை, சம்பங்கி  என பல்வேறு மலர்கள்  இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளதால் தினமும் சராசரியாக ரூ.1 கோடி மதிப்பிலான மலர்  வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினர்.

Tags : area ,Satiyamangalam , Sathyamangalam, flowers, cow, orchids
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...