சென்னை: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய மாநில அரசுக்கு சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக இந்த கொரோனா தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் வெண்டிலேட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த அளவுக்கு இந்த வெண்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளது என மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சுவாசத்துக்கு உதவும் வெண்டிலேட்டர் கருவிகள் அரசின் கைவசம் போதிய அளவில் இல்லை. கடந்த 21-ம் தேதி வரை வெண்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது ஏன்?. என கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழக மருத்துவமனைகளில் கொரோனா அறிகுறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அணிவதற்கு N-95 தரத்திலான முகக்கவசம் இல்லை என குற்றம் சாடியுள்ளார். போதிய முகக் கவசங்கள் இல்லாததால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அச்சப்படுகின்றனர். வெளிநாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து எப்போது வந்து சேரும்?. தமிழகத்தில் எவ்வளவு முகக்கவசங்கள் கையிருப்பில் உள்ளன என்று தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.