சென்னை: அத்தியாவசிய பணிகளுக்காக அலுவலகம் செல்பவர்கள் தங்கு தடையின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை சேப்பாக்கம் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் துறை அதுல்யா மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகந்நாதன் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது, 144 தடை உத்தரவு மற்றும் சுகாதார செய்திகள் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையில், தண்டோரா மற்றும் துண்டு பிரசுரங்கள் வருவாய் துறை ஊழியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
அதே நேரம், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய போலீசார் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்தியாவசிய பணிகளுக்காக அலுவலகம் செல்பவர்கள் தங்கு தடையின்றி சென்றுவர மாவட்ட ஆட்சி தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையானவர்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகளை சென்னையில் இருந்து 37 மாவட்ட வருவாய் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்களும் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்ன உத்தரவிடப்பட்டுள்ளது.