சென்னை: துபாய், கோலாலம்பூர், ஓமன் நாட்டில் இருந்து வந்தவர்கள் வில்லிவாக்கத்தில் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலை அடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களை தனிமைப்படுத்தி 15 பேருக்கு முத்திரை குத்தினர். துபாய், கோலாலம்பூர், ஓமன் நாட்டிற்கு சென்று விட்டு வில்லிவாக்கத்திற்கு வந்து அந்த பகுதியில் சுற்றித்திரிவதாக சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு அப்பகுதி மக்கள் தொலைபேசியில் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சுகாதார ஆய்வாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வெளிநாட்டிற்கு சென்று வந்த சுமார் 15 பேரை தனியாக அழைத்தனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விளக்கம் அளித்தனர். மேலும் அவர்கள் கையில் முத்திரை குத்தினர். அவர்கள் வசிக்கும் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். 15 பேரும் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது.
மறுபடியும் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயலக்கூடாது என்று அறிவுரை கூறி வில்லிவாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுபோல, வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு சென்னைக்கு வந்து சுற்றித் திரிபவர்கள் குறித்து உடனடியாக சென்னை மாநகராட்சிக்கு தகவல் தரும்படி மக்களுக்கு அறிவுறுத்தினர்.