புதுடெல்லி: பிரதமர் மோடி தனது நாடாளுமன்ற தொகுதியான உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியை சேர்ந்த மக்களுக்கு நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உயிர்ப்பலி வாங்கி வரும் கொரோனாவை ஒழிக்கும் பணியின்போது சில துன்பங்கள் நேரிடும். அதை பற்றி கவலைப்படாமல் பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைப்பு தரவேண்டும். நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ள இந்த 9 நாட்களில் தினமும் ஒரு ஏழைகளுக்கு உதவி அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஏழைகள், தினக்கூலிகள் மீது இரக்கம் காட்டுவதும் கொரோனாவை தோற்கடிப்பதன் ஒரு நடவடிக்கையே. மகாபாரத போரில் 18 நாட்களில் ெவற்றி கிடைத்தது. கொரோனாவுக்கு எதிரான இந்த போர் 21 நாட்களை எடுத்துக் கொண்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்காவிட்டால் அமைதியை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
கொரோனாவை கட்டுப்படுத்த போராடும் டாக்டர்கள், விமான ஊழியர்கள், அத்தியாவசிய சேவை பணியாளர்களிடம் தவறாக சிலர் நடந்து கொண்டது எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில டிஜிபி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொலைகார கொரோனா வைரஸ் ஏழைகள், பணக்காரர்கள் என வித்தியாசம் பார்த்து வருவதில்லை. எனவே, வீட்டிலேயே தங்கியிருந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு உத்தரவின்போது சிறப்பான பலனை பெற அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசு நிர்வாகத்துக்கு அழுத்தத்தை ெகாடுக்க கூடாது. டாக்டர்கள், போலீசார், உள்ளிட்டோர் கொரோனாவை ஒழிக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கொரோனா விவகாரத்தில் மூடநம்பிக்கையை நம்பக் கூடாது. புரளி மற்றும் சுயமருத்துவத்தையும் ஆதரிக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.