தண்டையார்பேட்டை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களையும் சோதனை செய்து அதில் வரும் பயணிகளை சுகாதாரத்துறை கண்காணிப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி அமெரிக்காவில் இருந்து சௌகார்பேட்டை அன்னப்பிள்ளை தெருவை சேர்ந்த பொறியாளர் புபேந்திரன் (35) என்பவர் வந்துள்ளார் அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல் மொட்டை மாடி பால்கனி வீட்டுக்கு வெளியே சுற்றித்திரிந்து உள்ளார்.
இதனால் அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் மாநகராட்சி அதிகாரிக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் சென்னை மாநகராட்சி ஐந்தாவது மண்டல அதிகாரி மனோகரன் உத்தரவின்பேரில் மாநகராட்சி சுகாதார மருத்துவர் ஜெகதீசன் சுகாதார அலுவலர் மாப்பிள்ளை துறை மற்றும் போலீசார் துணையுடன் பூபேந்திர வீட்டிற்கு சென்று அக்கம்பக்கத்து இடம் விசாரணை செய்து அந்த நபரை அங்கிருந்து தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை கொண்டுவந்து மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுபோல் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீட்டுக்குள் இல்லாமல் வீட்டுக்கு வெளியே சுற்றுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு, இதுபோல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.