×

கொரோனா பாதிப்பு: எனது வீட்டை தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவமனையாக்கி உதவ நினைக்கிறேன்....கமல்ஹாசன் ட்விட்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தமது வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் மருத்துவ மையமாக மாற்றி உதவி செய்ய காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. இதனிடையே நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 5 பேரில் 4 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ள ஒருவர் சென்னையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஆவார். 5 பேரும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, எனத் தெரிவித்துள்ளார்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தமது வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,house ,hospital ,Kamal Haasan Dwight ,Simple People , Corona, Hospital, Kamal Haasan
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்