சென்னை: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஆட்டி வருகிறது. இந்தியளவில் கொரோனா வைரசால் 11 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். அன்றைய நாள், நாடு முழுவதும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டன. பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அதிமுக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இன்று(நேற்று) மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை144 தடை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். மாவட்ட எல்லைகள் மூடப்படும். மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். வெளியே வரும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில், ஊரடங்கு குறித்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமரின் 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடித்து மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான சவாலை தமிழக மக்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்வார்கள் என நம்புகிறேன். கொரோனாவை தடுக்கும் சவாலை எதிர்கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும். மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தால் மட்டும் தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி வெளியே நடமாடும் மக்களால் அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்தார்.