சென்னை : செய்திதாள்கள் மூலம் கொரோனா பரவுவதற்கு குறைவான சாத்தியமே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 10 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600ஐ நெருங்குகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கம் என்ற உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்தார். வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களுக்கு செய்திதாள் வாசிப்பது தான் பொழுது போக்கு.
இதனிடையே செய்தித்தாள், ரூபாய் நோட்டுகள், உணவுப் பொருட்களைப் பேக்கேஜ் செய்து வரும் அட்டைகள் ஆகியவற்றின் மூலம் வைரஸ் தொற்று ஏற்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் நிலவுகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, பல்வேறு சூழ்நிலைகள், தட்ப வெப்ப நிலைகளில் எடுத்து வரப்படும் பொருள்கள் மூலம் கொரோனா பரவ குறைவான சாத்தியமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் இந்திய மருத்துவ சங்க (indian medical association) முன்னாள் தலைவரான கே.கே. அகர்வால், செய்திதாள்களும், மற்ற பொருள்கள் போன்றதுதான் என்றும், ஆதலால் செய்திதாள்களை வாசிக்கும் முன்பும், வாசித்த பிறகும் கைகளை சுத்தம் செய்வது அவசியம் என தெரிவித்துள்ளார்.
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வைராலஜி பேராசிரியர் டி.ஜேக்கப்ஜான் .
‘தி பிரிண்ட்’ என்ற இணைய இதழுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,இன்றைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதற்குச் சாத்தியமுள்ள வழிகளை நோக்கும்போது, செய்தித் தாள்கள் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு.செய்தித்தாளை விநியோகிக்கும் நபருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தாலோ, அவர் விநியோகம் செய்யும் செய்தித்தாளின் மீது தும்மவோ அல்லது இருமவோ செய்திருந்தாலோ மட்டும்தான் வைரஸ் பரவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதற்கான சாத்தியம் மிகக் குறைவு. மருத்துவரான நான்இப்போதும் அன்றாடம் செய்தித்தாள்களை வாங்கி வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்,இவ்வாறு டி.ஜேக்கப்ஜான்கூறியுள்ளார். அதேநேரம், ஒருவேளை நீங்கள் படித்த செய்தித்தாள் வழியாக வைரஸ் பரவும் என்ற சந்தேகம் இருந்தால், செய்தித்தாள் படித்த பிறகு சோப்பு போட்டு நன்றாகக் கையைக் கழுவினால் போதும். பிறகு வைரஸைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.