சென்னை: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர்அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஆட்டி வருகிறது. இந்தியளவில் கொரோனா வைரசால் 11 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். அன்றைய நாள், நாடு முழுவதும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டன. பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அதிமுக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. நேற்று மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை144 தடை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். மாவட்ட எல்லைகள் மூடப்படும். மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். வெளியே வரும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா என்ற கொடூர வைரசை தடுக்க வேண்டுமென்றால் சமூகத்திலிருந்து விலகி இருப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். நம்மையும், நம் குடும்பத்தையும், நம் குழந்தைகளையும், நண்பர்களையும் பாதுகாக்க இதைவிட்டால் வேறு வழியில்லை. ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம். ‘உங்கள் வீட்டை சுற்றி லட்சுமண கோடு போடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் அதை தாண்டாதீர்கள். 21 நாட்களுக்கு வேறெதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே இருங்கள். அனைவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’’ என்றார்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு தொடர்பாக சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திபாதி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், அன்பழகன், செங்கோட்டையன் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தப்பின் முக்கிய முடிவு வெளியாக வாய்ப்புள்ளது.