கோவிட்-19 குறித்து, ‘டிராவல் மெடிசின்’ என்ற மருத்துவ இதழில் அமெரிக்காவின் லூசியானா மாகாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜேம்ஸ் டையஸ் எழுதியுள்ள கட்டுரை: கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக நோய் உடைய நோயாளிகளுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களுக்கு கோவிட் - 19 தாக்கும் முன்பாக பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளே இதற்கு காரணம். இதனால், நோயாளியின் சுவாசக் குழாய் சுருங்கி விடுகிறது. கோவிட்-19 வைரஸ் ஏற்பட காரணமாக இருக்கும் புதிய SARS-CoV-2 உள்ளிட்ட, சார்ஸ் பீட்டா வகை கொரோனா வைரஸ்கள், பாதிக்கப்பட்ட நோயாளியின் சிறிய சுவாசக் குழாய்கள் வழியாக நுரையீரலுக்குள் நுழைவதற்காக ஆஞ்சியோடென்சின் என்ற ரத்தத்தில் இருக்கும் ஒரு வகை புரதத்தின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. இதனால், ஒருவருக்கு காய்ச்சல், சளி, கடுமையான சுவாசப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த அறிகுறிகள் தோன்றிய 10 முதல் 14 நாட்களுக்குள் அவற்றுக்கு சிகிச்சை பெற வேண்டும்.
ஏனென்றால், பொதுவாக மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளிட்ட இதய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோடென்சின்னை மாற்றும் என்சைம் தடுப்பான்கள் (ACEIs) மற்றும் ஆஞ்சியோடென்சினை ஏற்கும் தடுப்பான்கள் (ARBs) அதிகளவில் பரிந்துரைக்கப்படுவதால் அவற்றையே அவர்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வகை நோயினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பல ஆண்டுகளாக தினமும் இந்த மருந்துகளை உட்கொண்டு வருகின்றனர். இதனால், கொரோனாவினால் இவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவ்வகை நோய்களைக் கொண்ட முதியவர்களையே கோவிட்-19 பெருமளவில் பாதிக்கிறது.