சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவல் தொடங்கி விட்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஆபத்தின் அறிகுறியாகும்.இத்தகைய சூழலை சமாளிக்க வேண்டுமானால், அதற்கு 144 தடை போதுமானதல்ல; மாறாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் ஊரடங்கின் மூலம் இன்றைய நிலையை சமாளிக்க முடியும். மற்றொருபுறம், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இது தவிர்த்திருக்கப்பட வேண்டும். சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனி மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் நோய்ப்பரவலை தடுக்க முடிந்தது. தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.