சென்னை: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளை வெளியேற்றி கொரோனா சிறப்பு வார்டுகளை தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன் முதல்கட்டமாக சென்னை பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை 5 மடங்கு அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தற்போது தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ள காரணத்தால் கொரோனா சிறப்பு வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தற்போதுவரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்நோக்கு மருத்துவமனையில் 350 படுக்கை கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அனைத்து உள்நோயாளிகளும் வெளியேற்றப்பட்டனர். இதேபோல அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளை வெளியேற்றிவிட்டு சிறப்பு வார்டுகள் அமைக்க நடவடிக்கை தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
கொரோனா கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்
044-29510400
044-29510500
9444340496
8754448477