சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வெளி மாநிலத்தவர்கள் தவித்து வருகின்றனர். இவர்களை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் மீட்டு திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், வியாசர்பாடி மற்றும் எழும்பூர் பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களில் தங்க வைத்துள்ளனர்.
நேற்று காலை பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்டோர் பூக்கடை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி அறிந்ததும் பூக்கடை இன்ஸ்பெக்டர் சித்தார்சங்கர் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், ‘சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் இல்லாததால் பூக்கடை நைனியப்பன் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருக்கிறோம். விடுதி உரிமையாளர் எங்களிடம் கூடுதல் வாடகை தரவேண்டும்’ என்று கேட்கிறார். தற்போது, நாங்களே கஷ்டத்தில் இருக்கிறோம்” என்றனர். ‘சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீசார் அவர்களை விடுதிக்கு அழைத்து சென்றனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.