×

அனைத்து ரயில்கள் ரத்து எதிரொலி சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு சீல்

சென்னை: அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டதையடுத்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்கள் மூடி சீல் வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் நேற்று காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்தனர். அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் ரயில்களில் பயணம் செய்பவர்கள் மூலம்தான் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாக உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே துறை அறிவித்தது. சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக தெற்கு ரயில்வே சார்பிலும் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்படி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் அனைத்து புறநகர் ரயில்கள், பறக்கும் ரயில்கள் உட்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட ரயில்கள் அனைத்தும் அந்த ரயில்கள் சேர வேண்டிய இடங்கள் வரை மட்டுமே இயக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து புறப்பட்ட ரயில்கள் அனைத்தும் அதிகாலையில் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் பல கட்ட சோதனைக்கு பின்பு வெளியில் அனுப்பப்பட்டனர். மேலும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டத்தையடுத்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து விடாதபடி சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களும் பேரிகார்டுகள் வைத்து அடைத்து சீல் வைக்கப்பட்டது. மேலும் யாரும் நுழைந்துவிடாதபடி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Tags : train stations ,Egmore , All trains,canceled ,Echo Central, Egmore train stations
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...