கராச்சி: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவினால் அண்டை நாடான பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு புனிதப் பயணம் சென்று திரும்பிய பாகிஸ்தானின் கைர்பூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார். இவரைப் பார்க்க சென்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வருவாய் துறை நண்பர்கள், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்கள் அவரை சந்தித்தபோது அவருக்கு எவ்வித வைரஸ் பாதிப்பு அறிகுறிகளும் இல்லை. தற்போதைய டிரெண்ட்படி, அனைவரும் குழுவாக செல்பி எடுத்துக் கொண்டனர். அதனை சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பே அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை சந்தித்த அனைவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.