×

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் பங்கேற்க தொண்டு நிறுவனங்கள், தனிநபர் இணையத்தில் பதிவு செய்யலாம்: மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனி நபர்கள் இணையதளத்தின் வழியே விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளும், வீடுகளில் கொசுப்புழுக்களை ஆய்வு செய்யும் பணியாளர்களை கொண்டு வீடுகள்தோறும் சென்று சளி, இருமல், காய்ச்சல் உள்ளனவா என கணக்கெடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு மாநிலங்களிலிருந்து  ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மாநகராட்சி சமுதாய கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாநராட்சியின் சார்பில் உணவும் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வமுள்ள தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும்  அரசு சாரா அமைப்புகள் மாநகராட்சியின் www. chennaicorporation.gov.in  என்ற இணையதள  முகவரியில் covid-19. Volunteers Registration & NGO’s Registration என்ற இணைப்பில் தங்கள் விவரங்களை பதிவு செய்யவும், கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உதவிப் பொருட்கள் மற்றும் தங்களால் வழங்கக்கூடிய பொருட்களின் விவரங்களை 044 - 25384530 என்ற 24 மணி நேரம் இயங்கக்கூடிய தொலைபேசி எண்ணில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : organizations ,NGOs ,Corporation Commissioner , Corona virus, charities, personal internet, corporation commissioner
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த...