திருமலை: சுய ஊரடங்கு உத்தரவால் திருப்பதி ரயில் நிலையத்தில் பசியுடன் தவித்த பயணிகள் சிறப்பு பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள், ரயில்கள் உட்பட வாகனங்கள், வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், திருத்தணி, திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோர், வியாபார நிமித்தமாகவும், மருத்துவமனை மற்றும் சுவாமி தரிசனம் செய்வதற்கும் என பல்வேறு காரணங்களுக்காக திருப்பதிக்கு வந்திருந்தனர்.
இவர்கள் நேற்று முன்தினம் காலை தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல திருப்பதி ரயில் நிலையம் வந்தனர். ஆனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளை ரயில் நிலையத்தில் போலீசார் அனுமதிக்கவில்லை. அதேபோல் பஸ் நிலையத்திலும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பயணிகள் ரயில் நிலையத்தின் வெளிப்பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கினர். மேலும் திருப்பதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் குடிக்க தண்ணீர் இன்றியும், உணவு இன்றியும் பசியுடன் அவதிபட்டனர். இரவிலும் பயணிகள் பசியுடன் படுத்திருந்தனர்.
இதுகுறித்து திருப்பதி எஸ்பி ரமேஷூக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் நள்ளிரவில் அங்கு வந்த போலீசார், பிளாட்பாரத்தில் படுத்திருந்த பயணிகள் அனைவரையும் அழைத்து அவர்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். இதில் தமிழக பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் மாநில எல்லை வரை சிறப்பு பஸ்கள் மூலம் தங்கள் ஊர்களுக்கு சென்றனர்.