சவுதி: சவுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் கோவிட் 19 காய்ச்சலுக்கு இதுவரை 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 119 பேருக்கு கோவிட் காய்ச்சல் இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிட் 19 காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் சவுதி அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
அந்த வகையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை சவுதி விதித்துள்ளது. இந்த உத்தரவு இன்று மாலை முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு நாடான ஐக்கிய அமீரகத்தில் 153 பேர் கோவிட் -19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐக்கிய அமீரகம் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கோவிட் -19 இதுவரை உலகளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.