சென்னை: மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘கோவிட்-19 பரவுதல் காரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களின் எல்டி மற்றும் எல்டிசிடி மின்னிணைப்புகளுக்கு 2020ம் ஆண்டு மார்ச் மாத பட்டியலுக்கு 22.3.2020 முதல் 31.3.2020 வரை மீட்டர் ரீடிங் எடுக்க முடியாததால் முந்தைய மாத பட்டியல் (அதாவது ஜனவரி/பிப்ரவரி 2020)-ஐ மார்ச் 2020 மாத கணக்கீட்டாக எடுத்து பணம் செலுத்துமாறு கோரப்படுகிறது.
இவ்வாறு செலுத்திய மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதளவழி மூலம் வலைதள வங்கியியல், கைப்பேசி வங்கியியல், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டண கவுன்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொள்கிறது.