சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதனடிப்படையில் இவ்வாறான பெரிய இயந்திரங்கள் மூலம் பெரிய பெரிய சாலைகளில் கிருமி நாசினிகளை தெளிக்கும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் இந்த பெரிய இயந்திரங்கள் மூலம் பெரிய பெரிய தெருக்களில் விரைந்து கிருமி நாசினி தெளிக்கப்படும்.பொது மக்கள் தேவைக்காக 24 மணி நேரம் மருத்துவமனைகள் அம்மா உணவகங்கள் இயங்கும். சமுதாய கூடங்களில் ஏற்கனவே நிகழ்ச்சி நடைபெறுவதற்கான பதிவு செய்யப்பட்டு இருந்தால் அந்த நிகழ்ச்சி மட்டும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.