×

நாளை முதல் 31ம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை குறைப்பு: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் வரும் 31ம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் சேவை குறைக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு வெப்ப அளவீடு சோதனை உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களும், ரயில் பெட்டிகளும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் மத்தியில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இன்று ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரவலை மேலும் தடுக்கும் வகையில் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயக்க நேரம் மாற்றப்படுகிறது. அதன்படி, காலை 4.30 முதல் 6 மணி வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது. இதேபோல், இடைப்பட்ட நேரமான காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அத்தியாவசிய பணிக்கு செல்வோர் மட்டும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் இதற்கு தங்களின் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Metro Rail Service , Metro Rail Service, Reduction, Administration
× RELATED நாட்டிலேயே முதல்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை!!