புவனேஷ்வர்: ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பெரும் அச்சமடைந்தனர். சட்டீஸ்கரின் ஜக்தல்பூரில் நேற்று காலை 11.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவானது. இதேபோல் அண்டை மாநிலமான ஒடிசாவின் மால்கன்கிரியில் அதே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு ரிக்டர் அளவுக்கோலில் நிலநடுக்கம் 4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் அருகில் இருந்த பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள், அலறியடித்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் நீண்ட நேரத்துக்கு பின்னரே தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். எனினும், இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ அல்லது சேதமோ இல்லை என்று தெரியவந்துள்ளது.