பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லண்டனில் இருந்து சமீபத்தில் திரும்பிய அவர் லக்னோவில் பிரமாண்ட பார்ட்டி நடத்தியதாகவும் அதில் 100க்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்றதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பார்ட்டியில் பங்கேற்ற ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகனும் பாஜ எம்பியுமான துஷ்யந்த் சிங்கும், உபி சுகாதார அமைச்சர் ஜெய்பிரதாப் சிங்கும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளதாக அறிவித்தனர். இதனால், கனிகா கபூர் மீது நோயை பரப்புதல், அரசு விதிகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கனிகா கபூர், லண்டனில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த போது, கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பிக்க பாத்ரூமில் ஒளிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.