பியொங்யாங்: கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையில், தங்களது நாட்டில் ஒரு பாதிப்பும் இல்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 186 நாடுகளில் வேகமாக பரவி மக்களை கொல்லும் பெரும் கொள்ளை நோயாக மாறியுள்ளது. தற்பொது வரை, சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.
உலகமே கொரோனா வைரசால் கடும் அச்சத்தில் இருக்கும் சூழலில் வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது. இது கொரோனாாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு முழுமையாக அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், சிறிய ரக ஏவுகணைகள் சோதனையை நடத்தியுள்ளது. வடக்கு பியாங் மாகாணத்தில் கிழக்கு கடல் பகுதியில் 2 சிறிய ரக ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. சீனாவை ஒட்டியுள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், வட கொரியா இதுவரை தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லவே இல்லை என்று கூறியுள்ளது.
வடகொரியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்குள்ள சூழல்களை அரசு ஊடகங்கள் மட்டுமே வெளியிட்டு வருகின்றது. இது தொடர்பாக ஆளும் தொழிலாளர் கட்சியின் ஊடகத்தில் தெரிவித்துள்ள தகவலின் படி; சீனாவில் வைரஸ் தாக்குதல் தொடங்கியபோதே, வடகொரியா தனது எல்லைகளை மூடப்பட்டுள்ளது. சீனா உடனான வணிக போக்குவரத்தையும் நிறுத்தியது. நாட்டில் உள்ள வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு தூதர்கள், அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். 30 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உலகத்தில் இருந்தே வடகொரியா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டது.
இதனாலே, வட கொரியாவில் ஒரு கொரோனா பாதிப்பு கூட கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை தலைநகரில் கட்டுவதற்காக அதிபர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.