லக்னோ : கொரோனா வைரஸ் பரவலுக்கு துணை போனதாக கூறி இந்திய திரைப்பட பின்னணி பாடகி கனிகா கபூர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து 9ம் தேதி மும்பை திரும்பிய கனிகா கபூர் 11ம் தேதி லக்னோவிற்கு விமானத்தில் சென்று 13,14 மற்றும் 15ம் தேதிகளில் 3 விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதனையடுத்து 18ம் தேதியன்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் லக்னோவில் தனியார் மருத்துவனையில் பரிசோதனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் கனிகா கபூர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சிகளில் மூத்த அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டதால் பிரச்னை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக எம்பி துஷ்யந்த் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் பலர் பங்கேற்றதால் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதில் பாஜக எம்.பி.துஷ்யந்த் சிங் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றதால் அவருடன் தொடர்பில் இருந்த எம்பிக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தக் குழு ஒன்றில் துஷ்யந்த் சிங் பங்கேற்றதும் தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக பொது நிகழ்ச்சிகளில் கனிகா பங்கேற்றதால் அவர் மீது லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.