புதுடெல்லி; விமான நிலையங்கள், அணுசக்தி மையங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் புதிதாக 1018 பணியிடங்களை உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய தொழில பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) தற்போது 1.8 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்த வீரர்கள் நாட்டில் உள்ள 60 விமான நிலையங்கள், அணுசக்தி மையங்கள், முக்கிய அரசு கட்டிடங்கள், டெல்லி மெட்ரோ நிலையங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு விமான நிலையங்கள் காஷ்மீர் போலீசிடம் இருந்து சிஐஎஸ்எப் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இது தவிர முக்கிய பிரமுகர்களுக்கும் இவர்கள் சிறப்பு பாதுகாப்பு குழு என்ற பெயரில் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விமான நிலையங்கள், அணுசக்தி மையங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, இந்த படையில் புதிதாக 1018 பணிcயிடங்களை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், ‘‘சிஐஎஸ்எப்.பில் ஏற்கனவே 899 பணியிடங்களை புதிதாக ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 119 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் 1018 பணியிடங்களை கொண்டு அடுத்த 2 ஆண்டுகளில் புதிய பட்டாலியனை உருவாக்க முடியும்,’’ என்றார்.