புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடம் கற்பிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா வைரசில் இருந்து மாணவர்களை காப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லாரிகளை வரும் 31ம் தேதி வரை மூடி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த நாட்களில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே படிப்பதற்காக டிஜிட்டல் முறையில் கல்வி கற்பிக்கும் வசதியை மத்திய மனிதவள அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சக செயலாளர் அமித்கரே அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ‘கொரோனா தாக்குதலால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிப்படையாமல் இருக்கவும், டிஜிட்டல் முறையில் கல்வி கற்பிப்பதை ஊக்கப்படுத்தும் வகையிலும் மனிதவள அமைச்சகம் தீக்ஷா, இ பாத்சாலா, என்ஆர்ஓஇஆர், ஸ்வயம் மற்றும் ஸ்வயம் பிரபா போன்ற ஆன்லைன் கல்வி முறையை அறிமுகம் செய்துள்ளது.
தீக்ஷா இணையதளத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ.புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள ‘கியூஆர் கோட்’டை கொண்டு, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து படிக்கலாம். என்சிஇஆர்டி உருவாக்கியுள்ள இ பாத்சலா என்ற இணையதளத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பாடத் திட்டம், 1886 ஆடியோக்களாகவும், 2000 வீடியோக்களாகவும், 696 இ புத்தக வடிவிலும் பல்வேறு மொழிகளில் இடம் பெற்றுள்ளது. இதற்கென தனி மொபைல் ஆப்பும் உள்ளது. இது தவிர ஸ்வயம் என்ற தேசிய ஆன்லைன் தளத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் இன்ஜினியரிங் உள்பட பல்வேறு பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டமும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஸ்வயம் பிரபா என்ற இணையதளத்திலும் உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது பாடங்களை 24 மணிநேரமும் படிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.