×

மனைவி, மகளுக்கு கொலை மிரட்டல்: கூலி தொழிலாளி கைது

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், ஞானமணி நகரை சேர்ந்தவர் கண்ணன் (48). இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், மேலும் ஜீவா (19) மற்றும் 12 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். கண்ணன் அதே பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் கண்ணன், தன்னுடன் வேலை செய்து வந்த யுவராணி என்பவருடைய மகள் கல்பனா (19) என்ற பெண்ணை அழைத்து சென்று, செங்கல்பட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இதுபற்றி அறிந்த அவரது மனைவி மஞ்சுளா மற்றும் மகள் ஜீவா ஆகியோர் தங்களுடன் வருமாறு கண்ணனை அழைத்தனர். அப்போது மனைவி, மகள் என்றும் பாராமல் கண்ணன் அவர்களை கடுமையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவரது மனைவி மஞ்சுளா, நேற்று 10க்கும் மேற்பட்ட மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நேற்று கண்ணனை கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Murder ,Wage worker , Wife, Daughter, Murder, Murder Worker, Arrested
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...