- சேப்பாக்கம்-திருவள்ளிகேனி தொகுதி
- அபார்ட்மெண்ட்
- லாயிட்ஸ் காலனி
- சேப்பாக்கம்-திருவள்ளிகேனி
- வாடகை குறைப்பு
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன் எம்எல்ஏ (திமுக) ஆகியோர் கொடுத்த கவன ஈர்ப்பு மீது விவாதம் நடந்தது. அது வருமாறு: ஜெ.அன்பழகன் (திமுக): தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தரமான வீடுகளை கட்டி வாடகைக்கு விட வேண்டும். சென்னையில் உள்ளவர்கள் குறைந்த விலையில், அதேநேரம் தரமான வீடுகளாக இருக்கும் என்றுதான் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். ஆனால், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான லாயிட்ஸ் காலனியில் வீடு வாடகை திடீரென 200 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த குடியிருப்புகள் 1962ம் ஆண்டு கட்டப்பட்ட, பழைமையான கட்டிடம் ஆகும். ஆண்டுக்கு 5 சதவீதம் மட்டுமே வாடகை உயர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் 2020ம் ஆண்டு முதல் அதிக வாடகை கட்டணம் மற்றும் பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை 6 ஆயிரம் வாடகை செலுத்தி வந்தவர்கள், 20 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது. நகரத்தில் உள்ள தனியார் வீடுகளில் கூட ஆண்டுக்கு 500, 1000தான் கட்டணம் உயர்த்தப்படுகிறது. லாயிட்ஸ் காலனி வீடுகளில் எந்த வசதியும் இல்லை. வாடகை கட்டவில்லை என்றால், வீடுகளை காலி செய்ய சொல்லி விடுவார்கள் என்ற அச்சத்தில் பணம் கட்டுகிறார்கள். எனவே, வாடகை கட்டணத்தையும், பராமரிப்பு கட்டணத்தையும் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: லாயிட்ஸ் காலனியில் வீட்டுவசதி வாரிய வாடகை குடியிருப்பில் 290 வீடுகள் உள்ளது. இது பொதுமக்களுக்கு மாத வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
1.2.2020 முதல் வாடகையை உயர்த்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சென்னை மாநகரில் சதுர அடிக்கு 14.15 என்றும், புறநகர் பகுதியில் 11.45 என்றும், பராமரிப்பு கட்டணம் மாதம் 1,100 என்றும் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. தண்ணீருக்காக மாதம் 200 வசூல் செய்யப்படுகிறது. முதல்வருடன் கலந்து பேசி வாடகை கட்டணத்தை குறைப்பது மற்றும் பராமரிப்பு கட்டணத்தை குறைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.