திருவொற்றியூர்: மாதவரம் மேம்பாலம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். மாதவரம் மேம்பாலம் அருகே புறநகர் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் சிஎம்டிஏ வாகன நிறுத்த மைய வளாகம் வழியாக செல்கின்றன. இந்நிலையில் இங்கு உள்ள சில அலுவலகங்கள் மற்றும் கடைகள் சாலையை ஆக்கிரமித்து இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக மாதவரம் மண்டல உதவி ஆணையர் தேவேந்திரனுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், செயற்பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர்கள் குமார், மேனகா மற்றும் ஊழியர்கள் நேற்று காலை சிஎம்டிஏ வாகன நிறுத்த மையத்திற்கு வந்தனர். அங்கு ஆக்கிரமித்து இருந்த கடைகள் மற்றும் அலுவலக முகப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களை ஆக்கிரமித்து மீண்டும் கடைகள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படம், என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.