பெருந்துறை: தாய்லாந்து நாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் ஈரோடு வந்த வெளிநாட்டினர் 7 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர்களில் 2 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும் 5 பேர் பெருந்துறை அரசு ஐஆர்டி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த 3 நாளுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன்பின், அவருடன் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த மற்றொவரை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே, இங்கு 5 பேர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், அவரும் அங்கு உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள கொரோனா செல்லுக்கு அனுப்பப்பட்டது. இந் நிலையில், நேற்று காலை 10 மணிக்கு அங்கிருந்த 6 பேரும் தனித்தனி சிறப்பு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந் நிலையில், தாய்லாந்து நாட்டினருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் நேற்று ஐஆர்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து கலெக்டர் கதிரவன் கூறுகையில்,`பெருந்துறை அரசு ஐஆர்டி மருத்துவமனையில் போர்க்கால அடிப்படையில் 40 கொரோனா வைரஸ் தடுப்பு வார்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்காததால் அவர்கள் இங்கேயே தனித்தனி வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பரிசோதனை முடிவின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை தொடரும்’’ என்றார்.