கடத்தூர்: கடத்தூர் அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டியில் கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், 1லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது. இந்த கூடத்தில், கிராமப்புற தூய்மை பணியாளர்கள் 8பேர், மண்புழு உரம் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஓராண்டுக்கு முன், இந்த கூடத்தின் மேற்கூரை சூறைக்காற்று வீசியதில் சேதமடைந்தது.
மேலும், இதை சுற்றி அமைக்கப்பட்டிருந்த, தடுப்புகளும் சேதமுற்றது. இதனால் மண் புழு உரம் தயாரிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு, மலிவு விலையில் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தின் மேற்கூரை மற்றும் சுற்றியுள்ள திரைகளை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.