×

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் அதிர்ச்சி!

பெய்ஜிங் : சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில்  இன்று காலை 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிகேஜ் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 28.63 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 87.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இப்பகுதி நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுவதோ அல்லது போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. தொடர்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்ட டிங்ரி மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் தெற்கு எல்லை பகுதியான நேபாளத்தின் மவுண்ட் எவரெஸ்ட் தேசிய இயற்கை ரிசர்வ் பகுதியை சேர்ந்தவை. மேலும் தகவல்களை சேகரிக்க மாகாண அரசு கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் அதிகாரிகளை அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே 9 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மூன்று தீயணைப்பு டெண்டர்கள் மையப்பகுதிக்கு அனுப்பப்பட்டன. மேலும், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் காத்திருப்புடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 7.20 மணிக்கு காத்மாண்டுவில் உள்ள தேசிய நில அதிர்வு மையத்தில் 6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி திபெத்தின் குயிலிங்கில் அமைந்திருப்பதாக நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்பு, மேற்கு நேபாளத்தின் சுற்றுலா மையமான போகாராவில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : earthquake ,Tibet Autonomous Region ,China ,magnitude earthquake , China, Tibet Autonomous Region, 5.9 Richter, Earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்