×

புகாரை ஏற்க போலீசார் மறுப்பு: தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி

பெரம்பூர்: கொடுங்கையூர் சீதாராம் நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் மகள் மோனிகா (25).  இவருக்கும் கடலூரை சேர்ந்த எட்வின் தினகரன் (28) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான  இரண்டு மாதத்தில் இருந்தே எட்வின் தினகரன் மோனிகாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு கொடுங்கையூர் காவல் நிலையத்தில்  மோனிகா புகார் கொடுத்தார்.  

போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் பேசி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எட்வின் தினகரன் மோனிகா வீட்டில் இருந்த 12 சவரன் நகை, 11 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் பாண்டிச்சேரியில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மோனிகா எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார்.

அப்போது போலீசார் இங்கே போதுமான ஆட்கள் இல்லை. அதனால் உனது கணவரை நீயே இங்கு அழைத்து வா, நாங்கள் பேசி பிரச்சினையை தீர்த்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த மோனிகா வீட்டிற்கு சென்றுவிட்டார் மீண்டும் நேற்று முன்தினம் சென்று புகார் கொடுக்கும் போதும் போலீசார் புகாரை வாங்க மறுத்து அவரை திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் மனமுடைந்த மோனிகா  நேற்று மதியம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை  உறவினர்கள்  எருக்கஞ்சேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : suicide ,teenager ,Perumbur , Perumbur, adolescent, suicide attempt
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை