×

நீதிபதி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார் லஞ்சம் வாங்கி கைதான பெண் பிடிஓ பரிதாப சாவு: கரூர் அருகே பரபரப்பு

க.பரமத்தி: திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி அருகே காதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ரமேஷ்(37). இவர், கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் பகுதியில் நிலம் வாங்கி அந்த நிலத்தை 17 வீட்டு மனைகளாக பிரித்துள்ளார். இந்த மனைகள் விற்பனை செய்வதற்காக மனைப்பிரிவு ஒப்புதல் பெறுவதற்கு க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணி (48) என்பவரை அணுகியுள்ளார். இதில் அவர் ஒப்புதல் வழங்க ரூ.30,000 லஞ்சம் கேட்டார். இதனால், ரமேஷ் கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசாரின் ஆலோசனைப்படி ரமேஷ், ரசாயனம் தடவிய ரூ.30ஆயிரத்தை க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று ஜெயந்திராணியிடம் நேற்றுமுன்தினம் பகல் 12 மணியளவில் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் ஜெயந்திராணியை கைது செய்தனர்.

பின்னர் அவரை தாந்தோணிமலையில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். வீட்டில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மலர்விழி முன்னிலையில் ஆஜர்படுத்த இரவு 10.45 மணியளவில் கரூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் உடல் நிலை சரியில்லை. சரியாக மூச்சு விடமுடியவில்லை என்று கூறியவாறு ஜெயந்திராணி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ஜெயந்திராணி இறந்தார்.
.
இதுகுறித்து ஜெயந்திராணி உறவினர்கள் கூறுகையில், ‘‘வீட்டுக்கு சோதனைக்கு அழைத்து சென்றபோதே ஜெயந்திராணி உடல்நிலை சரியில்லை, மருத்துவமனைக்கு போகவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் போலீசார் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என்றனர். இறந்த பிடிஓ ஜெயந்திராணியின் கணவர் மதுக்குமார் பாஜகவில் கரூர் மாவட்ட முன்னாள்  தலைவராக இருந்தவர். தற்போது அமைப்புசாரா அணி மாநில செயலாளராக உள்ளார்.


Tags : Judge, fainting, bribery, woman PDO, pity
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...