மயிலாடுதுறை: நாகை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்தவர் ஆனந்த் (32). சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து பெங்களூர் விமான நிலையம் வந்தவரை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வீட்டிற்கு அனுப்பினர். இந்நிலையில், ஆனந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து தப்பி சென்றுள்ளதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. குத்தாலம் பேரூராட்சியில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்ட விளாவடி காலனி பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் புகழேந்தி (40), இப்பகுதியை சேர்ந்த ஆனந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தப்பியுள்ளார். ஏலத்தை ஏன் வைத்தீர்கள் எனக்கேட்டுள்ளார். இதுபற்றி ஆனந்த் புகாரின்படி குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து பாஜக பிரமுகர் புகழேந்தியை கைது செய்தனர்.