சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 31 படுக்கை வசதி கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, அவர்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தியுள்ளோம். டெல்லியில் இருந்து ரயில் மூலம் வந்த 20 வயது இளைஞருடன் தொடர்பில் இருந்த 10 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளோம்.
ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட நபர் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார். கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார துறை சார்பில் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளோம்.குறும்படம் ஒன்றையும் தயாரித்துள்ளோம். அவை வெளியிடப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே சானிடைசர்கள் பயன்படுத்துவது அவசியம். மீதமுள்ளவர்கள் சாதாரண சோப் பயன்படுத்தி கைகழுவினால் போதுமானது என்பதை வல்லுனர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.