சென்னை: லிதுவேனியாவில் சிக்கித் தவிக்கும் 20 தமிழக மாணவர்களை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியா நாட்டில் 20க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள விலினஸ் ஜெடிமினஸ் டெக்னிகல் பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும், 60க்கும் மேற்பட்ட இதர மாநிலத்தை சேர்ந்த இந்திய மாணவர்கள் ஜெடிமினஸ் பல்கலைக்கழகம் மற்றும் கவுனஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பார்வைக்கு கொண்டு சென்று மாணவர்களை உடனே தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளேன். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.