×

கொரோனா பீதியால் சென்னை விமான நிலையத்தில் ஒரேநாளில் 84 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஒரே நாளில் 84 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் பீதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சர்வதேச, உள்நாட்டு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாததால் ஒரே நாளில் மட்டும் நேற்று 50 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மலேசியாவில் இருந்து 6 விமானங்கள், இலங்கையில் இருந்து 4, குவைத்தில் இருந்து 3, மஸ்கட்டில் இருந்து 3, துபாய், தாய்லாந்தில் இருந்து தலா 2 விமானங்கள் மற்றும் தோகா, சிங்கப்பூர், பக்ரைன், ஜெர்மன், லண்டன் ஆகிய இடங்களிலிருந்து தலா ஒரு விமானம் என 25 விமானங்களும், சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளுக்கு செல்லும் 25 விமானங்களும் என மொத்தம் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல் போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து டெல்லி, பெங்களூரு செல்லும் தலா 4 விமானங்கள், மும்பை செல்லும் 3 விமானங்கள், மதுரை, ஐதராபாத், கொச்சி, கோவா, கொல்கத்தா, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு செல்லும் தலா 1 விமானம் வீதம் மொத்தம் 17 விமானங்களும், இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் 17 விமானங்களும் என மொத்தம் 34 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 84 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Tags : flights ,panic ,Chennai ,Corona ,Chennai Airport , Corona panic overnight at Chennai Airport, 84 flights canceled
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...