கும்மிடிப்பூண்டி: யு டியூப் வீடியோ மூலம் காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன் மற்றும் உடந்தையாக இருந்த தாயை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே காப்புக்காட்டில் நடந்த இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கம்மாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர் (27). இவர் தனியார் காஸ் ஏஜென்சியில் பணியாற்றுகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இவர்கள் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களிடையே ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அந்த மாணவி ஏற்கெனவே ஒருமுறை கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
இதன்பிறகு 2 முறையாக 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில், நேற்று மாலை மாணவிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த சவுந்தர், மாணவியை கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையம் காப்பு காட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து ஒருசில கருவிகள் மூலம் மாணவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் கை வெளியே வந்ததும் பதற்றம் அடைந்த சவுந்தர், தொப்புள் கொடியை அறுப்பதற்கு பதிலாக, வேறொரு பகுதியை அறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதன்காரணமாக மாணவிக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பயந்துபோன சவுந்தர், உடனடியாக மாணவியை பைக்கில் அமரவைத்து, சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு இறந்த நிலையில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மாணவியை மேல்சிகிச்சைக்காக சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மருத்துவமனை தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரை கைது செய்து கும்மிடிப்பூண்டி போலீசில் ஒப்படைத்தனர்.
இதற்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் தாயையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து சவுந்தரிடம் விசாரித்தபோது, ‘’யு-டியூப் மூலம் காதலிக்கு பிரசவம் பார்த்தேன். இதற்காக பஞ்சு, கிளவுஸ், பிளேடு ஆகியவற்றை வாங்கினேன். பின்னர் காப்புக்காட்டுக்கு அழைத்து சென்று நானே பிரசவம் பார்த்தேன்’ என்று சவுந்தர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் மாணவியின் தாயையும் கைது செய்தனர்.