சென்னை: கொரோனா பாதிப்பால் வெளியே வர அஞ்சி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்க, இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திய கும்பல் ஒன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை கடத்த முயன்றுள்ளது. பெருமளவு போதை பொருட்களை சென்னை வழியாக இலங்கைக்கு கடத்த போதைப் பொருள் கும்பல் ஒன்று சரியான நேரத்திற்காக காத்திருப்பதை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கத்தால் மக்கள் பலர் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் இந்த சமயத்தை அந்த போதைப்பொருள் கும்பல் பயன்படுத்த நினைத்துள்ளது. இதனை கண்டுபிடித்த போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சென்னை மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே போதைப் பொருள் கடத்தி வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்தனர். அந்த இருசக்கர வாகனத்தில் 3 கிலோ மெத்தாம்பிடமைன், 1 கிலோ சாரஸ் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் பிடிப்பட்டன. இதன் சந்தை மதிப்பு 5 கோடி ரூபாயை தாண்டும் என ஏ.டி.ஜி.பி. ஷகில் அக்கர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த செல்வமணி மற்றும் இலங்கையை சேர்ந்த நிலாஃப் ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பர்மாவில் இருந்து சென்னை வழியாக இலங்கைக்கு இந்த போதை பொருட்களை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கொரோனா தாக்கத்தால் ஊர் வெறுச்சோடி கிடப்பதால் போலீஸ் தொந்தரவு இருக்காது என நினைத்து இந்த சமயத்தை தேர்ந்தெடுத்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொரோனா தாக்கத்தால் பல அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையிலும், தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.