பஞ்சாப்: பஞ்சாபில் நாளை முதல் பஸ், ஆட்டோ போக்குவரத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பஞ்சாப் மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, உலகளவில் 8,944ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,18,766 ஆக உயர்ந்துள்ளது. அதில், 84,386 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 169ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் 8ம் வகுப்பு வரை எவ்வித தேர்வும் எழுதப்படாமல், அனைவரும் அடுத்த வகுப்புக்கு செல்லும் வகையில் ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாபில் நாளை முதல் பஸ், ஆட்டோ போக்குவரத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா வைரஸ் 166 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் பரவாமல் இருக்கு இந்தியாவில் முதல் முதல் மாநிலமாக பொது போக்குவரத்தை நிறுத்துவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இது மார்ச் 20-ம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.