×

கோயில் திருவிழாவிற்கு அனுமதி கோரி பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவிற்கு மீண்டும் அனுமதி வழங்கக்கோரி பக்தர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து வருகிற 23ம் தேதி வெகுவிமரிசையாக பூக்குழி திருவிழா நடைபெற இருந்தது. சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் விரதமிருந்து பூக்குழி இறங்க தயாராக இருந்தனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கலெக்டர் பூக்குழி திருவிழா நடைபெற தடை விதித்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த பக்தர்கள், கோயில் வளாகத்தில் நேற்று போராட்டத்தில் இறங்கினர். திருவிழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி சுமார் 500க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் பகுதியில் நகர் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் அதிக அளவு பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டே வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கூறும்போது, காலம் காலமாக பாரம்பரியமாக வெகு விமரிசையாக நடைபெற்று வரும் பூக்குழி திருவிழாவை கொரோனா பாதிப்பை காரணம் காட்டி தடை செய்வது எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு பூக்குழி திருவிழா நடைபெற வேண்டும். எனவே இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களிடம் போலீசாரும் கோயில் நிர்வாகத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags : Pilgrims ,The Temple Festival , The Temple Festival
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்