பாட்னா: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கின் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் அக்ஷய் குமார் சிங் என்ற தூக்கு தண்டனை கைதியின் மனைவி, ‘நான் விதவையாக வாழ விரும்பவில்லை, எனவே, எனது கணவரை தூக்கில் போடும் முன் விவாகரத்து பெற்று கொடுங்கள்’ என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பல வழிகளில் தூக்கு தண்டனையை தாமதப்படுத்த இவர்கள் வழக்கறிஞர் உதவியுடன் போராடிப் பார்த்தனர்.
கடைசியாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால், சட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘‘அனைத்து சட்ட நடைமுறைகளும் அவர்களைப் பொறுத்தவரை முடிந்து விட்டன. ஆகவே இனியும் தாமதம் சாத்தியமில்லை’’ என்கின்றனர். இதற்கிடையே, மீரட்டில் இருந்து தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பவன் என்ற பணியாளர் டெல்லி திகார் சிறைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று குற்றவாளிகள் 4 பேருக்கும் போலி தூக்கு நிறைவேற்றுதல் குறித்து செயல்முறையை செய்து பார்த்தார். அதனால், நாளை குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், தனது கணவன் சாவுக்குப் பிறகு தான் விதவை என்ற பெயருடன் வாழ விரும்பவில்லை.
எனவே தூக்குத் தண்டனைக்கு முன்பே அக்ஷய் குமார் சிங்கிடமிருந்து தனக்கு விவாகரத்து வாங்கித் தருமாறு பீகார் அவுரங்காபாத் உள்ளூர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மனு செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இன்று விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அக்ஷய் குமார் சிங் மனைவி புனிதா கூறும்போது, “என் கணவர் அப்பாவி. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக சட்ட ரீதியாக விவாகரத்து கோரியுள்ளேன்” என்றார்.
4 குற்றவாளிகளும் புதிய மனு
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரும் தங்களின் தண்டனையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்தனர். அதில், அக்ஷய் சிங் நேற்று முன்தினம் 2வது முறையாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா, இந்த மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி திகார் சிறை அதிகாரிகள், போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், மனுவை இன்று விசாரிப்பதாக கூறினார்.